பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது அதன் அமர்வுகள் நிறுத்தப்பட்டவேளை எவ்வாறு காணப்பட்டதோ அதே நிலையே தொடரும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சமீபத்தில் இடம்பெற்ற மாற்றங்கள் சட்டவிரோதமானவை, பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு கடிதத்தினை வழங்கியதை தொடர்ந்தே இந்த முடிவை எடுத்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தற்போதைய பிரதமருக்கு பிரதமருக்கான ஆசனத்தை வழங்கப்போவதில்லை மேலும் தற்போதைய அரசாங்க உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வார்கள் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கரிசனைகள் நியாயமானவை என நான் கருதுகின்றேன், இதன் காரணமாக கட்சியொன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மாற்றங்களை மேற்கொள்ள மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.