தமிழை விட தெலுங்கில் அதிக வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை அனுஷ்கா. ‘பாகுபலி’ படம் வந்த பிறகு அவரது புகழ் இன்னும் அதிகமாகியது. இருந்தாலும் அந்தப் படத்திற்குப் பிறகு அவர் மிகவும் தேர்வு செய்துதான் படங்களில் நடிக்கிறார்.
தற்போது ‘நிசப்தம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.
இனி, சரித்திரப் படங்களில் நடிக்க வேண்டாம் என அனுஷ்கா முடிவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் படங்களை எடுத்து முடிக்க நீண்ட நாட்கள் ஆகின்றன. மேலும், மேக்கப் போடுவதற்கும், அதைக் கலைப்பதற்கும் படப்பிடிப்பு நாட்களில் அதிக நேரம் ஆகிறது, உடல் ரீதியாகவும் சோர்வு ஏற்பட்டுவிடுகிறது ஆகிய காரணங்களால் அனுஷ்கா அந்த முடிவை எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
மணிரத்னம் இயக்க உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காகவும் கூட அனுஷ்காவை அணுகியதாக ஒரு தகவல் வந்தது. மேலே சொன்ன காரணங்களுக்காக கூட அனுஷ்கா அந்தப் படத்தில் நடிக்க மறுத்திருக்கலாம் என்கிறார்கள்.