சீனாவில் பைலு புயலால் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு சீனாவை தாக்கியுள்ள 11ஆவது புயலான பைலு புயல் கிழக்கு சீனாவில் உள்ள ஃபுஜியான் மாகாணத்தில் டொங்ஷான் கவுண்டியில் கரையை கடந்தது.
இதனால் அங்கு மணிக்கு அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. பலத்த காற்றினால் சியாமென் நகரில் மரம் ஒன்று கார் மீது விழுந்ததில் அந்த கார் சேதமடைந்தது.
இதே போல அங்கு ஒரு குடியிருப்பின் ஜன்னல்கள் உடைந்து கீழே நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்து காரை சேதப்படுத்தின. சுழன்று அடித்த புயல் காற்றினலும் கனமழையாலும், அங்கு தாழ்வான பகுதியில் இருக்கும் விவசாய நிலங்கள் மூழ்கியதோடு, பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.
இந்த புயலினால் தெற்கு சீனாவின் கங்டோங் மாகாணத்தில் பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. அந்த மாகாணத்தின் சௌசோவ் கவுண்டியில் மின் இணைப்பு செயலிழந்ததால் கிட்டதட்ட 4 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. போர்கால அடிப்படையில் மின் இணைப்புகளை சீர்செய்யும் பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது.