துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரது போட்டி அரசியல் காரணமாக புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசியதாவது:
உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில்நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. இது அக்கட்சி மீது வெறுப்பு அலை வீசுவதைக் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பணமதிப்புநீக்க நடவடிக்கையால் சிறு குறு நடுத்தர தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. விவசாயமும் பாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.யால் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து வருகின்றன. வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் மோசடிசெய்வது அதிகரித்து விட்டது.
ரூ.12 ஆயிரம் கோடி கடன்பெற்ற நீரவ்மோடி வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். ஆனால் விவசாயத்திற்காக வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய அரசு முன்வராத காரணத்தால் விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய நடைப் பயண போராட்டம் நாடுமுழுவதும் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
போட்டி ஆட்சி
புதுச்சேரியில் புதிதாக வேலை வாய்ப்புகளை மாநில அரசு ஏற்படுத்தவில்லை. தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட எந்த நிறுவனமும் இல்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து புதுச்சேரி, முதியோர்கள் வாழும் மாநிலமாக மாறிவிடும். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பஞ்சாலைகளில் ரூ.180 கோடி முதலீடு செய்ய மாநில அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய-மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்த மறுக்கின்றன.
நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்து முதல்வரிடம் கேட்டால் எனக்கு சம்பந்தம் இல்லை என்கிறார். தனியார் மருத்துவக் கல்லூரி மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த அரசு ஏன் மறுத்து வருகிறது என்று தெரியவில்லை. பொது விநியோகத் திட்டம் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து துணை நிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் கவலை இல்லை. இருவருக்கும் இடையே யாருக்கு கூடுதல் அதிகாரம் என்ற பதவிப் போட்டிதான் நடந்து வருகிறது.இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
இந்த பேட்டியின்போது நிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார்,வி. பெருமாள், புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், பிரதேசக்குழு உறுப்பினர் தா. முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.