காமராஜர் துறைமுகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி விதிகளை பேசி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் மார்ச் 15 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.காமராஜர் துறைமுகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், துறைமுகத்திற்கு முழு நேரத் தலைவர், நிர்வாக இயக்குநர், இயக்குநர்கள் நியமிக்கப்பட வேண்டும், தகுதியான ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2017 முதல் குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காமராஜர் துறைமுக எம்ப்ளாயீஸ் யூனியன், மீஞ்சூர் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் மார்ச் 15 எதிர்ப்பு நாள் அன்று காமராஜர் துறைமுக நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.காஞ்சனா தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜி.விநாயகமூர்த்தி, நரேஷ்குமார், எம்ப்ளாயீஸ் யூனியன் நிர்வாகிகள் சி.வி.ஹாஜூ, பழனிகுமார், டில்லிபாபு, குமார், சுசிலா உட்பட பலர் கலந்து கொண்டுபேசினர்.