அமெரிக்காவின் புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அருகில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட மியாமி நகரில், புளோரிடா சர்வதேச பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழகத்தை ஒட்டி ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் இந்த சாலையை கடப்பது கடினமாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது.இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை வழியே புளோரிடா பல்கலைகழகம் மற்றும் எதிரேயுள்ள மாணவர்கள் விடுதியை இணைக்கும் 174 அடி நீள நடைமேடை பாலம் அண்மையில் திறக்கப்பட்டது. இந்நிலையில் நடைமேடை பாலம் திடீரென இடிந்து விழுந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில், அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த சுமார் 8 வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய வாகனங்களின் உள்ளே இருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலம் இடிந்ததையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக மியாமி நகர நகர தீயணைப்புத் துறை தலைமை அதிகாரி டேவ் டவுனி தெரிவித்துள்ளார். நடைமேடை மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தால் வாகன ஓட்டிகள் வேற்று பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.