கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (03) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் காலை 8.00 மணிக்கு முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரீட்சை நிலையங்களுக்குள் கணிப்பான்கள், கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் உபயோகிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன் அவற்றை பரீட்சை நிலையத்தினுள் எடுத்து வருதல் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு சட்ட முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து வருட பரீட்சைத் தடை விதிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு, இவர்களில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 850 பேர் பாடசாலை மூலம் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பரீட்சை மண்டபத்தில் ஏதாவது முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்றதாக தகவல் கிடைத்தால் உடன் அறிவிக்குமாறும் விசேட தொலைபேசி இலக்கங்களை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் 0112 784208 அல்லது 0112 784537, 0113188350 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் எனவும் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுள்ளது.
இதேவேளை, பரீட்சை நடைபெறும் போது பரீட்சை செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக யாராவது செயற்பட்டால் பரீட்சைகள் திணைக்களத்துக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்குமாறு பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்கள் மேலும் கூறியுள்ளது.