குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன பிரதான ஆறு விசாரணைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்ட மா அதிபர் தப்புல டி லிவேர பதில் பொலிஸ் மா அதிபரிடம் முக்கிய விசாரணைகள் 5 தொடர்பில் அறிக்கை கோரியிருந்தார். இதற்கு மேலதிகமாக ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்தல் தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கையொன்றைக் கோரியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த அறிக்கைகளை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் பதில் பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை, வசீம் தாஜுதீனின் கொலை, கீத் நெயார் கடத்தல், தொண்டர் சேவையிலிருந்த 17 பேரின் கொலை, இளைஞர்கள் 11 பேரைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட நடவடிக்கை என்பன தொடர்பிலேயே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

