இடைக்கால கணக்கு அறிக்கை சமர்ப்பிப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்துக்கு எந்தவித லாபமோ, நட்டமோ ஏற்பட மாட்டாது என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் புது வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்றது. இவ்வருடம் டிசம்பரில் ஜனாதிபதித் தேர்தல் வருவதனால், வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படாமல் இடைக்கால கணக்கு அறிக்கையொன்று மாத்திரம் முன்வைக்கப்படவுள்ளது.
இது குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞானத்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் பிரியங்க துநுசிங்க அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்காது இடைக்கால கணக்கு அறிக்கையை முன்வைப்பதன் ஊடாக முதலீட்டாளர்களும், தொழில்முயற்சியாளர்களும் ஊக்குவிக்கப்பட மாட்டார்கள் என பிரியங்க துநுசிங்க தெரிவித்திருந்தார்.
அமைச்சர் இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது,
எந்தவொரு தேர்தல் நடைபெறும் வேளையிலும், வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதில்லை. இது எமது மரபு. இதற்குப் பதிலாக இடைக்கால கணக்கு அறிக்கையே சமர்ப்பிக்கப்படுகின்றது.
இதனால், நாடப்படுவது என்னவெனில், புதிய பிரேரணைகள் இன்றி, முன்னைய வரவு செலவுத் திட்டத்தின் யோசனைகளையே எதிர்வரும் 4 மாதங்களுக்கு முன்னெடுத்துச் செல்கிறோம் என்பதாகும். இது ஒரு புதிய விடயம் அல்லவெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நாட்டு மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் புதிய வரவு செலவுத் திட்டத்தினுடாக வழங்கப்படும் சலுகைகள் நலன்கள் அனைத்தும் மறுக்கப்படுவதற்கு இது வாய்ப்பாக அமைகின்றது. அத்துடன், அரச, தனியார் துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் பொதுவாக தீர்வொன்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கும் வாய்ப்பில்லாது போகின்றது.
அத்துடன், அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் பொது மக்களுக்கான சலுகைகள் என்பனவும் ஒத்திவைக்கப்படுவதற்கு இது காரணமாக அமைகின்றது என்பது பொதுவாக சிந்திக்கும் அனைவரதும் அபிப்பிராயம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

