இந்திய விமானத்தில் மது கேட்டு தகராறு செய்த சர்வதேச மனித உரிமை ஆணைய பெண் வக்கீலுக்கு லண்டன் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
கடந்தாண்டு நவம்பரில் மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் பெண் வழக்கறிஞர் சைமன் பர்ன்ஸ் பயணம் செய்தார்.
இவர் வடக்கு அயர்லாந்தில் பிறந்தவர், இங்கிலாந்தில் வசித்து வருகிறார். விமானத்தில் ஏறி அமர்ந்தது முதலே, சைமன் மது அருந்தினார்.
விமான விதிமுறைகளின்படி, 2 அல்லது 3 பெக் மது மற்றும் 3-4 கிளாஸ் ஒயின் வழங்கப்படும். ஆனால், சைமன் ஏற்கனவே நான்கு குவார்ட்டர் பாட்டில் ஒயின் அருந்தியதாக தெரிகிறது.
மேலும், தொடர்ந்து அவர் ஒயின் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு விமான ஊழியர் மறுத்ததால் அவருடன் சைமன் தகராறில் ஈடுபட்டார்.
ஊழியரின் முகத்தில் எச்சில் துப்பினார். இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில், ஹீத்ரோ விமான நிலையத்தில் சைமன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு லண்டன் ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் விமானத்தில் அதிகளவு மது அருந்தியது, விமான ஊழியரை அவமானப்படுத்திய குற்றத்திற்காக சைமனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

