சமீபத்தில் வெளியான நெடுநல்வாடை படத்தில் நடித்த அஞ்சலி நாயர் விமான பணிப்பெண். தற்போது இன்னொரு விமான பணிப்பெண்ணும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா.
இதில் ரியோ ராஜ், ராதாரவி, நாஞ்சில் சம்பத், விக்னேஷ்காந்த், உள்பட பலர் நடிக்கிறார்கள். ஷபீர் இசை அமைக்கிறார், யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கார்திக் வேணுகோபால் இயக்குகிறார். படத்தில் அறிமுகமாகும் ஷெரின் காஞ்சனவாலா ஒரு விமான பணிப்பெண். படத்தில் நடிப்பது பற்றி அவர் கூறியதாவது:
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 3 ஆண்டுகளாக விமான பணிப்பெண்ணாக பணி புரிந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் புரொடக்சன் பேனரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்திக் வேணுகோபாலன் இருவருக்கும் நன்றி.
படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞர்களும் எனக்கு மிகவும் உதவியாகவும், ஆதரவாகவும் இருந்தனர். எனது முதல் தமிழ் திரைப்படம், கதை அம்சம் உள்ள நல்ல படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. மேலும் பல திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்றார்.