எரிபொருள் விலை, பல தடவைகள் குறைக்கப்பட்ட நிலையில், பேருந்துக் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில், நிதி அமைச்சில் இன்று திங்கட்கிழமை பேச்சு இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இது பற்றிய பேச்சுக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனத்தினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒரு லீற்றர் டீசலின் விலையை 5 ரூபாவாலும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 10 ரூபாவாலும் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் டீசல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் முதலாம் திகதி டீசல் 7 ரூபாவாலும், கடந்த 15 ஆம் திகதி டீசல் விலை 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டது. கடந்த மாதம் 30 ஆம் திகதி பெற்றோல் விலை 5 ரூபாவால் குறைக்கப் பட்டது. அவ்வாறே டீசல் விலையும் குறைக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே பேருந்துக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் இன்று திங்கட்கிழமை பேச்சு நடத்தப்படவுள்ளது. பேருந்துக் கட்டணக் குறைப்புக்கான வீதம் தொடர்பில் இணக்கம் எட்டப்படலாம் என்று தனியார் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதுவரை டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிபலனை, பயணிகளுக்குப் பெற்றுக்கொடுக்கத் தயாராகவுள்ளோம் என்று சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி தனியார் பேருந்துக் கட்டணத்தை 5 வீதத்தால் குறைக்க முடியும் என்பதை உறுதியாகக் கூறமுடியும் என்று தனியார் பேருந்து சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

