ஜெய்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (19) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை 7 விக்கெட்களால் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிகொண்டது.
கணிசமான மொத்த எண்ணிக்கைகளைக் கொண்ட இப் போட்டியில் 5 பந்துகள் மீதம் இருக்க ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றிபெற்றது.
15 வயதுடைய வைபவ் சூரியவன்ஷி அசுர வேகத்தில் துடுப்பெடுத்தாடி 244.73 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 93 ஓட்டங்களைக் குவித்து ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
38 பந்துகளை எதிர்கொண்ட வைபவ் சூரியவன்ஷி 7 பவுண்டறிகளையும் 10 பவுண்டறிகளையும் விளாசி இருந்தார்.
இந்த வெற்றியுடன் ராஜஸ்தான் றோயல்ஸ், ப்ளே ஓவ் சுற்றுக்கான வாயிலை அண்மித்துள்ளது.
லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட கடினமான 221 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 225 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.
யஷஸ்வி ஜய்ஸ்வால், வைபவ் சூரியவன்ஷி ஆகிய இருவரும் 39 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஜய்ஸ்வால் 23 பந்தகளில் 43 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து வைபவ் சூரியவன்ஷியும் த்ருவ் ஜுரெலும் 2ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர்.
சூரியவன்ஷி ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் லுவான்-ட்றே ப்ரிட்டோரியஸ் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார். (196 – 3 விக்.)
த்ருவ் ஜுரெல், டொனவன் பெரெய்ரா ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவையான எஞ்சிய ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
ஜூரெல் 53 ஓட்டங்களுடனும் பெரெய்ரா 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது.
மிச்செல் மார்ஷ், ஜொஷ் இங்லிஸ் ஆகிய இருவரும் 50 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஜொஷ் இங்லிஸ் 29 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
நிக்கலஸ் பூரன் தனது துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மிச்செல் மார்ஷ், ரிஷாப் பான்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பான்ட் 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மிச்செல் மார்ஷ் 57 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 96 ஓட்டங்களைப் பெற்று துரதிர்ஷ்டவசமாக கடைசி ஓவரின் கடைசிக்கு முந்தைய பந்தில் ரன் அவுட் ஆனார்.
பந்துவீச்சில் யாஷ் ராஜ் புஞ்சா 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: வைபவ் சூரியவன்ஷி