முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஒரே வாரத்துக்குள் அவரைப் பிணையில் விடுவிப்பதற்கான திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று (20) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தினர்.
பிள்ளையானின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான அசாத் மௌலானாவிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தினார்.
தற்போது பிரான்சில் வசித்து வரும் அசாத் மௌலானாவிடம், பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து விசேட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.
அந்த வாக்குமூலத்தின் விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரே வாரத்துக்குள், சிறையில் இருந்த பிள்ளையானை எப்படியாவது பிணையில் எடுப்பதற்கான விசேட வேலைத்திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்ததாக அசாத் மௌலானா தனது வாக்குமூலத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் வாக்குமூல ஆவணங்களும் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.