சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும் மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியுமான விஜே டயஸ் காலமாகியுள்ளார்.
அவர் அனைத்துலகக் குழுவின் தலைவர்களில் ஒருவராகவும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அவருக்கு பாரிய மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (27) காலை உயிரிழந்துள்ளார்.
ஆகஸ்ட் 27 அவர் தனது 81வது பிறந்தநாளை கொண்டாடவிருந்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“ விஜேயின் மரணம், குறிப்பாக சோசலிச சமத்துவக் கட்சிக்கும், ஒட்டுமொத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் மற்றும் இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கும் பெரும் இழப்பாகும். அவர் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடைப்படையாகக் கொண்ட, சர்வதேச சோசலிசத்தின் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்காக, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு சளைக்காத போராளியாக இருந்தார்.
தோழர் விஜே, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) ஸ்தாபக உறுப்பினராக இருந்தார். 1964 இல் லங்கா சம சமாஜ கட்சி, பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்துகொண்ட போது, ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக 1968 இல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.
அப்போது லங்கா சம சமாஜக் கட்சியின் இளம் உறுப்பினராக இருந்த தோழர் விஜே, காட்டிக்கொடுப்பை எதிர்த்த இளைஞர் குழுவில் ஒரு முன்னணி நபராக இருந்தார், மேலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ், தேவையான அரசியல் படிப்பினைகளைப் பெற்று, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுதியான அரசியல் அடித்தளங்களை அமைத்தார்.

1987 டிசம்பரில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரியவின் துயரமான, அகால மரணத்திற்குப் பின்னர், தோழர் விஜே அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து அவர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த மே மாதம் சோசலிச சமத்துவக் கட்சியின் சமீபத்திய மாநாட்டில் அவர் கட்சியின் தலைவராக அமர்த்தப்பட்டார்.
தோழர் விஜே டயஸ், அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகள், அதன் போலி-இடது அடிவருடிகள் மற்றும் தொழிற்சங்க ஏஜென்சிகளில் இருந்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக போராடுவதில் கட்சிக்கு தலைமை தாங்கினார். அவரது வயது மற்றும் பலவீனமான உடல்நிலை ஒருபுறம் இருக்க, இராஜபக்ஷ மற்றும் விக்கிரமசிங்க அரசாங்கங்களுக்கும் அவற்றின் சிக்கன மற்றும் அடக்குமுறை திட்ட நிரலுக்கும் எதிரான தற்போதைய வெகுஜன எழுச்சிக்கு மத்தியில், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களுக்கு ஒரு புரட்சிகர சோசலிசப் பாதையை வகுப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடான இலங்கையில் நிலவும் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் மத்தியில், அவரது இழப்பு குறிப்பாக உணரப்படுகிறது. எவ்வாறாயினும், மனிதகுலத்திற்கான சோசலிச எதிர்காலத்திற்காக அவர் முன்னெடுத்த வாழ்நாள் போராட்டத்தை இடைவிடாது முன்னெடுக்கின்ற, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் பணியில் அவரது சக்திவாய்ந்த அரசியல் மரபு வாழ்ந்துகொண்டிருக்கின்றது “ எனக் குறிப்பிட்டுள்ளது.