சமீபத்தில் மலையாளத்தில் நயன்தாரா, நிவின்பாலி இணைந்து நடித்த ‛லவ் ஆக்ஷன் ட்ராமா’ என்கிற படம் வெளியானது. இளைஞர்களை கவரும் அனைத்து அம்சங்களுடன் வெளியான இந்தப்படம் தற்போது வசூல் ரீதியாகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரபல நடிகர் சீனிவாசனின் மகன் தயன் சீனிவாசன் இந்த படத்தை இயக்கி உள்ளார். காமெடி நடிகர் அஜு வர்கீஸுடன் இணைந்து வைசாக் சுப்பிரமணியன் என்பவர் தயாரித்துள்ளார். இவர் பழம்பெரும் தயாரிப்பாளர் பி சுப்பிரமணியம் என்பவரின் பேரன் ஆவார்.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மேரிலேண்ட் ஸ்டுடியோ நிறுவனத்தை துவங்கி கிட்டத்தட்ட 69 படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளரும் இயக்குனருமான பி சுப்பிரமணியம். 1979இல் அவரது மரணத்திற்குப் பிறகு திரைப்படங்கள் தயாரிப்பதை விட்டுவிட்டு சில காலம் கழித்து அவரது மகன்கள் சின்னத்திரை பக்கம் பக்தி தொடர்கள் தயாரிக்க சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை வாரிசான வைசாக் சுப்பிரமணியம் மீண்டும் சினிமாவிற்கும் நுழைய தருணம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் தயன் சீனிவாசன் இந்த கதையை கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து திரையுலகில் மீண்டும் நுழைவது என தைரியமாக முடிவெடுத்த வைசாக் சுப்ரமணியன், தற்போது படத்தின் வெற்றி மற்றும் வசூலால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.