ஒரு கொள்கையில் ஒருவர் எவ்வளவு உறுதியாக இருக்க முடியும், ஒரு போராட்டத்தை எவ்வளவு உன்னதமாக நடத்த முடியும் என்று உலகுக்கே உணர்த்தியவர்தான் திலீபன். தன் மக்களுக்காக 12 நாள்கள், ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட உடலுக்குள் செலுத்தாமல், உயிர் நீத்த திலீபனின் 30-வது நினைவுநாள் இன்று.
பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்ட திலீபன், நவம்பர் 27,1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரெழு கிராமத்தில் பிறந்தவர். இவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். கடந்த 1987-ம் ஆண்டு, இலங்கையில் மையம்கொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரிடம், முன்வைத்து உண்ணாவிரதம் இருந்த திலீபனின் 5 அம்ச கோரிக்கைகள் இவைதாம்.
* பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
* புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். * இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.* வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.* இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 1987 செப்டம்பர் 15-ல் உண்ணாவிரதம் தொடங்கி, 12 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். 12 நாள்களும் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட அருந்தாமல் கோரிக்கைகளில் உறுதியாக இருந்தார் திலீபன். அதனால், அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. 1987 செப்டம்பர் 26-ம் நாள் காலை 10.48 மணிக்கு திலீபனின் உடலிலிருந்து உயிர் பிரிந்தது.அந்த 12 நாள்களில் மூன்று முறை அவர் மக்களிடம் பேசினார். “நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்.” என்றார். இதையேதான் அவர் மூன்று முறை பேசியபோதும் சொன்னார். ஆம், பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.