பொன்னாலையில் மூன்று வீடுகள் மீது ஒரே நேரத்தில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வீதியில் உள்ள வீடுகள் மீதே இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு 8 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால், வீட்டின் ஓடுகள் உடைந்து கல் மற்றும் ஓடுகள் வீட்டினுள்ளே விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.