ஹபரண, திகம்பதஹ, ஹிரிவடுன்ன வனப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹிரிவடுன்ன, தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில் யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை வரை 7 யானைகளின் சடலங்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உடலில் விஷம் கலந்தமை காரணமாக யானைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்த யானைகளின் உடற்பாகங்கள் சோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் ஹிரிவடுன்ன வனப்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.