நாட்டில் போரை நிறுத்தினோம். ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் குண்டுகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “கோட்டாபய ராஜபக்ஷவின் உரையை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். செயல்படுத்தப்படவிருந்த திட்டம் மற்றும் கொள்கை குறித்து அவர் மிகவும் அழகாக விபரித்தார்.
இதுவே சஜித் பிரேமதாசவின் உரையில் எந்ததொரு பயனுடைய செயற்பாடுகள் குறித்த கருத்துக்களும் இல்லை.
மேலும் எமது ஆட்சிக் காலத்தில் நாங்கள், எங்கள் சொந்த உணவுப் பயிர்களை பயிரிட்டோம்.
ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் அரிசி இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. பின்னர் நாங்கள் அதிக கவனம் செலுத்தி, அரிசியில் தன்னிறைவு பெற தேவையானதைச் செய்தோம்.
விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் ஊடாக நாங்கள் தன்னிறைவு பெற்றோம். நெல் மட்டுமல்ல. உருளைக்கிழங்கு, எள், சோளம் ஆகியவற்றில் தன்னிறைவு பெற நடவடிக்கை எடுத்தோம்.
நாங்கள் விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தினோம். விவசாயத்தை அபிவிருத்தி செய்வது மற்றும் வெளிநாட்டு விவசாயிகளுக்கு அனுப்பப்படும் பணத்தை சேமிக்கும் விடயத்திலும் அவதானமாக இருந்தோம்.
விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கவும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டபோதே அரசாங்கம் மாறியது.
இதேவேளை எதிர்காலத்தில் பிறக்கவுள்ள குழந்தைகளுக்கும் நாட்டை அழிக்காமல் செய்ய வேண்டிய கடமைகள் அதிகம் உள்ளது.
இவ்வாறு நாம் நாட்டில் காணப்படுகின்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது குறித்தே ஆராய்ந்து செயற்படுவோம்.
ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டுக்கு என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும்.
நாங்கள் போரை நிறைவுக்கு கொண்டு வந்ததும் குண்டுகள் வெடிக்கவில்லை. ஆனால் தற்போது குண்டுகள் மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
ஆகையாலேயே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.