ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் 50வது படம் மஹா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இந்து மத துறவி கெட்டப்பில் தோன்றிய ஹன்சிகா கஞ்சா புகைப்பது போன்று காட்சி கொடுத்தார். ஆனால் அதையடுத்து முஸ்லீம் பெண் போன்ற கெட்டப்பில் அமர்ந்திருந்த ஹன்சிகா தொழுகை செய்வது போன்று இன்னொரு போஸ்டர் வெளியானது. அதோடு, கையில் துப்பாக்கியுடன் ஹன்சிகா நிற்பது போலவும் வெளியாகியிருந்தது.
அதையடுத்து, காவி உடையணிந்தால் தம் அடிப்பார். பர்தா அணிந்தால் மட்டும் தொழுகை நடத்துவார்களா? என்று இந்து மத ஆதரவாளர்கள் இயக்குனர் ஜமீலுக்கு எதிராக போர்க்கொடி பிடித்தனர்.
இந்தநிலையில், இந்து மத துறவிகளை கொச்சைப் படுத்தும் வகையில் நடித்திருப்பதாக நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் என்பவர் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாருக்கு நடவடிக்கை இல்லாததால் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுதாரரின் புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை போலீஸ் கமிசனருக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் பிறகே இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் நடித்த ஹன்சிகா மீது நடவடிக்கை பாயுமா? என்பது தெரியவரும்.