தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. இவர் தற்போது அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில், மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹன்சிகாவுக்கு இது ஐம்பதாவது படம் என்பதால், அதிக சிரத்தை எடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. நாயகியை மையப்படுத்தி உருவாகும், இப்படத்தை எக்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், ஹன்சிகா துறவி வேடமணிந்து சுருட்டு புகைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இது, ரசிகர்களிடையே வரவேற்பையும்; எதிர்பார்ப்பையும் உருவாக்கினாலும், இந்து அமைப்பினரிடையே மிகுந்த எதிர்ப்பை உருவாக்கியது.
இதுகுறித்து, இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் நாராயணன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்தார். அதில், இந்து மதம், பெண் துறவிகளை அவமதிக்கும் வகையில், ஹன்சிகா புகைப்பிடிப்பது போல் போஸ்டர் உள்ளது. எனவே, மஹா படம் தொடர்பாக, நடிகை ஹன்சிகா மற்றும் இயக்குநர் ஜமீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புகார் அளித்து இரண்டு மாதத்திற்கு மேலாகியும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நடவடிக்கை எடுக்கச் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நடிகை ஹன்சிகா, இயக்குநர் ஜமீல் ஆகியோர் மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.