ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், கோட்டாபய ராஜபக்ஸவும் இணைந்து கொண்டால் மாத்திரமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தலைநிமிரச் செய்யமுடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
விஜித்விஜே முனி சொய்சா, பௌசி, இந்திக பண்டார, மனுஷ நாணயக்கார ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றனர்.
அவர்களுக்கு எதிராக தயாசிறி ஜயசேகர ஒழுக்காற்று விசாரணை நடத்தாமல் இருப்பது, அவரும் ஐ.தே.க வுக்கு மீண்டும் செல்ல இருப்பதனாலா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்?
ஏற்கனவே, ஐ.தே.கட்சியில் இருந்த ஹதயாசிறி, ஐ.தே.க வின் தலைவராக சஜித்தை கொண்டுவர முயன்று தோற்றுப் போனதனாலேயே தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சீர்குலைக்க முயல்கின்றார்.