ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நல்லாட்சி அரசாங்கம் ஓரங்கட்ட முயற்சிக்கின்றமையினால் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறி தனியான ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
26.08.2018 அன்று அட்டனில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பிலான திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். எனினும் இது தொடர்பிலான பிரேரணை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா அவர்களின் மூலம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு இந்த பிரேரணை நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இதனை புறக்கணித்துள்ளது.
இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒரு போதும் நல்லாட்சியின் தலைவர் என்ற ரீதியில் அவரை கண்டுக்கொள்வதில்லையே ஆகும்.
இவ்வாறு பல விடயங்களில் இவ்வாறான ஓரங்கட்டும் செயல்பாடுகளே தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியினரால் இடம்பெற்று வருகின்றது.
இதனால் ஜனாதிபதி அவர்கள் உடனடியாக இதை நன்கு புரிந்து மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற ரீதியில் தனியான ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும். இதற்கு எல்லோரும் முன்வர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.