மெக்ஸிக்கோவில், மழைவெள்ளம் மூழ்கடித்த வயல் நிலத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு கரை சேர்த்தனர்.
மெக்ஸிக்கோவின் பல்வேறு மாநிலங்களில் நர்தா புயல் வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி, சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது.
அங்குள்ள சினாலோ (Sinaloa) மாநிலத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் வேறோடு சாய்ந்து, வீடுகள் பலத்த சேதமடைந்தன. இதேபோல் ஒசாக்கா (Oaxaca) மாநிலத்தில் பெய்த தொடர்மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கடற்கரை மாநிலமான ஜலிஸ்கோவிலும் (Jalisco), விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி மரங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில் விவசாய நிலம் ஒன்றில் மிதவை படகுடன் வெள்ளத்தில் சிலர் சிக்கி தவிப்பதாக வந்த தகவலை அடுத்து, மீட்பு குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று கயிறு மூலம் அவர்களை மீட்டனர்.
தற்போது புயல் வலுவிழந்தாலும், அதன் பெரும் பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.