ஹாங்காங்கில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின்போது, காவலர் ஒருவர் இளைஞர் மீது துப்பாக்கியால் சுட்ட நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஹாங்காங்கில் உள்ள சுயன் வான் (Tsuen Wan) பகுதியிலும் நேற்று கருப்பு நிற உடை அணிந்தபடி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தினர். இதனை எதிர்த்த போராட்டக்காரர்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
வன்முறையில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், லத்தியை கொண்டு காவலரை தாக்கியபோது, காவலர் பதிலுக்கு தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து இளைஞரின் மார்பை நோக்கி சுட்டுள்ளார்.
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகளைகேமராவில் பதிவு செய்திருந்த சில மாணவர்கள், அதனை தற்போது வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மக்கள் மீது காவலர்கள் நடத்திய இந்த கண்மூடி தனமான தாக்குதலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காவலர் தன்னை தற்காத்துக்கொள்ள துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.