வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்த சந்தேக நபர்கள் ஐந்து பேரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சலுகை வட்டியில் கடன் வழங்குவதாக சமூக வலைத்தளங்களின் ஊடாக அறிவித்து தங்களிடம் ஏமாறும் நபர்களிடம் வங்கிக் கணக்கின் விபரங்களை பெற்றுக்கொண்டு அந்த கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் வங்கிக் கணக்கிலிருந்து 500,000 ரூபாவை மோசடி செய்ததாக பெண் ஒருவரினால் கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் பிடபெத்த, வெல்லம்பிட்டிய மற்றும் நாரஹேன்பிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 30, 39 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் போலியான ஆவணங்கள் மற்றும் போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அவர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள், வங்கிஅட்டைகள், லேமினேடிங் மெஷின், ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகள், போலி ஓட்டுனர் அனுமதிப்பத்திரம், ரப்பர் ஸ்டாம்ப், சர்வதேச ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் என்பன கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர்கள் நேற்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.