பெங்களூருவில் நேற்று நடந்த போட்டியில், தாமதமாகப் பந்துவீசியதன் காரணமாக, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலிக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 206 ரன்கள் என்ற இமாலய இலக்கை, ராயுடு மற்றும் தோனியின் அதிரடியால் வெற்றிபெற்றது சென்னை அணி. இந்த வெற்றியின்மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
இந்நிலையில், நேற்று பெங்களூரு பந்துவீச்சாளர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, கேப்டன் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதமாக அறிவித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணி முதல் முறையாக நடத்தை விதிகளை மீறிப் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது என ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 2 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.