தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி இசையமைத்து வருபவர் அச்சு என்கிற அச்சு ராஜாமணி. தமிழில் விழித்திரு, கோலிசோடா 2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் சமீபத்தில் வெளியான நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்திற்கும் இசையமைத்திருந்தார்.
தெலுங்கிலும் ஓரளவு பிஸியாக வலம் வரும் இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஐதராபாத் அருகில் உள்ள நானக்ராம்குடா என்கிற நகரத்தின் வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த ஒரு காரின் மீது மோதாமல் இருப்பதற்காக சடன் பிரேக் பிடித்தார். அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
பலத்த காயங்களுடன் எழுந்திருக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த அச்சுவை, சரியாக அந்த நேரம் அந்த வழியாக வந்த தெலுங்கு இளம் நடிகர் சாய் தரம் தேஜ் கவனித்து தனது காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அச்சு.