கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மலையாள திரையுலகை புரட்டிப் போட்ட படம் தான் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம். மலையாள சினிமாவில் முதன் முதலாக 50 கோடி என்கிற வசூலை தொட்ட படமும் அதுதான்.. அந்தப்படத்தில் சொல்லப்பட்ட கதை அனைத்து மொழிக்கும் பொருந்துவதாக இருந்ததால்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியும் பெற்றது.
இந்த நிலையில் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன்லால் படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஜீத்து ஜோசப். தற்போது தமிழில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வரும் ஜீத்து ஜோசப், இந்த படம் முடிவடைந்ததும் வரும் நவம்பரில் மோகன்லால் படத்தை துவங்க இருக்கிறாராம்.
மோகன்லாலின் சொந்த நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கிட்டதட்ட 100 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். திரிஷ்யம் படம் போல இதுவும் ஒரு எமோஷனல் திரில்லர் ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.