இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மாத்திரமல்ல, விடுதலைப் புலிகள் மீதும் படையினர் போர்க்குற்றங்களைப் புரிந்ததாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பிரதமரின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிப்பதாகவும் சர்வதேச பொறிமுறை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
வடக்கிற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போரின்போது இடம்பெற்ற சம்பவங்களை மறப்போம் மன்னிப்போம் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து அந்தக் கட்சியின் தலைவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கூறிய சம்பந்தர், இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் நடைபெற்றமை, உள்நாட்டு விசாரணைகளினால் உறுதியாகியுள்ளதாகவும், இலங்கைக்கு வந்து சென்ற சர்வதேசத் தலைவர்கள், முக்கிய அதிகாரிகளிடமும் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மை நிலையைத் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், போர்க்குற்றங்களை இரு தரப்பும் புரிந்தனர் என்று சொல்லிவிட்டு எவரும் தப்பி விடமுடியாது என்றும், தெரிவித்தார்.
போர் என்றால், போர் விதிகளைப் பின்பற்றி, அந்நாட்டு மக்களைப் பாதுகாத்து போர் புரியவேண்டும் என்று சுட்டிக்காட்டிய சம்பந்தர், இதனை உதறி எறிந்துவிட்டு இலங்கை அரச படைகள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தினார்.
பல்லாயிரக்கணக்காக மக்களை கொன்று, ஆயிரக்கணக்கான மக்களை காணாமல் ஆக்கிய நிலையிலேயே, பிரதமர் போர்க்குற்றங்களுக்கான உண்மைகளை ஏற்று அதனை மறப்போம் மன்னிப்போம் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
அரச படைகளின் போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதமரின் கருத்தை வரவேற்கின்ற போதிலும், அவரின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிப்பதாகவும் கூறினார்.
படையினரின் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் வன்னியில் வாழ்வதாகவும், கொன்றொழிக்கப்பட் மக்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கும் நீதி வேண்டும் என்றும் கூறிய சம்பந்தர், சர்வதேச பொறிமுறை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்க அரசு அனுமதிக்கவேண்டும் என்றும் கோரினார்.
இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீது மட்டும் அல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் படையினர் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளதாகவும், சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட போராளிகள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே. இலங்கை அரசு ஐ.நா. தீர்மானங்களை மதித்து அதனை நடைமுறைப்படுத்தி உரிய வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து, உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.