2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்கள் ஆரம்பமாகவுள்ளன.
நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் இவ்விவாதங்கள் ஆரம்பமாகவுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவின் செலவுகளாக 13.5 பில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 8.2 பில்லியன் ரூபாய் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கானதென கூறப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை குழு நிலை விவாதங்களின் போது, தோற்கடிக்கப் போவதாக ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும், வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்தாலும், ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்படுமா எனும் எதிர்ப்பார்ப்புடன் குழு நிலை விவாதங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேலும் இந்த விவாதங்கள் இன்று முதல் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரையிலான 19 நாட்கள் நடைபெறவுள்ளன.
இந்த விவாதங்களின் நிறைவில், ஏப்ரல் ஐந்தாம் திகதி மாலை வரவு – செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.