முல்லைத்தீவு நீதிமன்றத்தின் தீர்ப்பை அலட்சியம் செய்து குருகந்த விகாராதிபதியின் உடலை விகாரை பிரதேசத்தில் அடக்கம் செய்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞான சார தேரர் உட்பட குழுவினரை உடன் கைது செய்யுமாறு கோரி முல்லைத்தீவு நகரில் நேற்று (24) பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நீதிபதியுமான சீ.வி. விக்னேஸ்வரன் உட்பட சட்டத்தரணிகள் அடங்கலாக பெரும் எண்ணிகையிலானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக இன்றைய சகோதார தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு பழைய வைத்தியசாலைக்கு அருகில் ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஊர்வலம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரையில் பயணித்துள்ளது. சுமார் ஆயிரம் பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு நீதிமன்றத்திலுள்ள சகல சட்டத்தரணிகளும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டதனால், வடக்கு நீதிமன்ற நடவடிக்கைகளும் செயலிழந்துள்ளதாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
வட மாகாணத்தின் இந்த சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்ததுக்கு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்ட சட்டத்தரணிகளும் தமது ஆதரவை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.