வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைந்த தனி நிருவாகத்துடன் கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்குதல் உள்ளிட்ட 11 அம்சங்கள் அடங்கிய தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கத்துக்கு முன்வைக்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் தேசிய பொதுக் கூட்டத்தில் வைத்து நேற்று (30) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த தீர்வுத் திட்டத்துக்கு நம்பிக்கை வைக்கக் கூடிய, பொருத்தமான ஒரு தீர்வை மூன்று மாதங்களுக்குள் வழங்காவிடின் ஜனநாயக ரீதியில் பாரிய போராட்டமொன்றை அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பிக்கப் போவதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் 16 ஆவது பொதுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட சிரேஸ்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்த மகஜர் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.