இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பவற்றின் பணிப்பாளர் சபைகள் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
வங்கிப் பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே இருக்கிறது. இது வரை எந்த வங்கிப் பணிப்பாளர் சபையும் கலைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்குத் தான் இருக்கிறது. இரு பணிப்பாளர் சபைகளையும் மீளமைக்குமாறு ஜனாதிபதி என்னிடம் எழுத்து மூலம் கேட்டிருந்தார். ஆனால், இரு பணிப்பாளர் சபைகளும் இதுவரையில் கலைக்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, முதலீட்டு சபை என்பவற்றின் பணிப்பாளர் சபைகளை கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து தனித்தனியாக விசாரணை நடாத்தப்படவுள்ளதாகவும் இதற்காகவே இவ்வாறு கலைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அமைச்சர் கிரியெல்ல இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.