பிக்பாஸ் வீட்டில் வனிதாவை அடித்ததால், முகென் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வந்துள்ள வனிதா, தினமும் ஏதாவது பிரச்சினைகளை ஏற்படுத்திய வண்ணமே இருக்கிறார். பிக்பாஸ் வீட்டை விட்டு இரண்டாவது போட்டியாளராக வெளியேறிய பின், அவர், அபி பற்றிய மீம்ஸ்களைத் தான் அதிகம் பகிர்ந்து வந்தார். இதனால் மீண்டும் வீட்டிற்குள் சென்ற உடனேயே, அபியைத் தான் அவர் முதலில் டார்கெட் செய்தார்.
முகெனுக்கும், அபிக்கும் பிரச்சினையை உண்டாக்கினார். இதில் முகென் ஆவேசப்பட்டு சேரைத் தூக்கி அடிக்கும் அளவிற்குப் போனார். பின்னர் ஒரு வழியாக அந்தப் பிரச்சினை முடிந்தது. நேற்று கவினையும், மதுவையும் வைத்து வம்பிழுத்தார் வனிதா. இதனால் பிக்பாஸ் வீடு சண்டைக்களமாக மாறியது.
இந்நிலையில், சண்டை ஒன்றில் முகென் வனிதாவை கன்னத்தில் அறைந்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சரவணனைப் போலவே, முகெனையும் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வெளியில் அனுப்பி விட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் உலா வருகிறது. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால் இந்தச் செய்தி காட்டுத்தீயாக இணையத்தில் பரவி வருகிறது. முகெனுக்கு ஆதரவாகவும், வனிதா மற்றும் பிக் பாஸுக்கு எதிராகவும் பலர் டுவீட் வெளியிட்டு வருகின்றனர்.
சக போட்டியாளர்களிடம் வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதி பிக்பாஸ் வீட்டில் இருக்கிறது. கடந்த சீசனிலும் கூட, டேனியிடம் வன்முறையாக நடந்து கொண்டதற்காக மஹத் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.