யாழ். ஒல்லாந்தர் கோட்டையினை இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாகவும் அங்கு பொது மக்களுக்கு செல்ல முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்திற்கு நேற்று(01) திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க யாழ். ஒல்லாந்தர் கோட்டையினை சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.
கோட்டையினை இரணுவம் தன்வசப்படுத்தியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு அங்கு செல்வதற்கான சுதந்திரம் இல்லையெனவும் தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை. யாழ். நகர மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக குறித்த அளவிலான இராணுவத்தினர் கோட்டையில் இருந்துவருகின்றனர். இது நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ள ஒரு சாதாரண நடவடிக்கையே ஆகும்.
பொது மக்கள் எந்நேரத்திலும் கோட்டைக்கு வந்து செல்ல முழு சுதந்திரமும் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.