யானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப் பாதுகாப்பளிக்குமாறு கோரி மட்டக்களப்பில் புதன்கிழமை மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டம் மட்டக்களப்பு – தொப்பிகல பகுதி மக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டப்பேரணியை நடத்தினர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திகிலிவட்டை கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தாயான முத்துலிங்கம் நிரஞ்சலா (வயது 31) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பல உயிரிழப்புக்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையிலேயே மக்கள் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, “யானைகளை சரணாலயத்தில் கொண்டே விடு இல்லையேல் எங்களை சரணாலயத்தில் அடைத்துவை, தமிழ் அரசியல்வாதிகள் யானையுடன் கொண்டாட்டம். தமிழ் மக்கள் யானைகளால் திண்டாட்டம். ஆற்றிலும் காட்டிலும் சாகும் எங்களைக் காப்பாற்றுங்கள், எங்கள் உயிர்கள் மிருகங்களுக்கு பலி கொடுக்கவா போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
கடந்த போர்ச் சூழலினால் வெகுவாகப் பாதிப்பட்டு இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள தமது வாழ்வாதாரத் தொழில் மற்றும் உடைமைகளையும் காட்டு யானைகள் அழிக்கின்றன. எனவே யானைகளின் தாக்குதலிலிருந்து பாதுகாப்புப் பெறும்பொருட்டு உடனடியாக மின்சார வேலிகள் அமைக்கப்படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிரான் செயலகப்பிரிவில் எந்தவொரு பகுதியிலும் இதுவரை யானை வேலி அமைக்கப்படவில்லை எனத் தெரிவித்த மக்கள், சுமார் 69 கிலோ மீற்றருக்கு யானை வேலி அமைக்கப்படவேண்டியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தின் நிறைவாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜரொன்றை கோராவெளி வட்டார மக்கள், பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபுவிடம் கையளித்தனர்.