நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் சிங்கள மக்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர். எனவே தமிழர் தரப்பிலிருந்துதான் மேலதிகப் பங்களிப்பு அவசியம் என முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “போர் முடிவடைந்த பின்னர், விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்.
குறித்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு விடுதலைப்புலி உறுப்பினர்கள் மன்னிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ள, இத்தகைய செயற்பாடுகளை தமிழர் தரப்பு வரவேற்கவேண்டும்.
நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சிங்கள மக்கள் என்ற வகையில் எமது கடமையை சரிவர செய்துள்ளோம். ஆகவே, நல்லிணக்கம் என்ற இலக்கு வெற்றியடைய வேண்டுமென்றால், தமிழர் தரப்பு கூடுதல் பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும்.
போர் காலத்தில் எனது தம்பி கொல்லப்பட்டார். அதற்காக நான் தமிழ் மக்களுடன் முரண்படவில்லை. எனக்கு அதிகளவில் தமிழ் நண்பர்கள் இருக்கின்றனர்.
படையினருக்கு எதிராக தாக்குதல் தொடுத்த புலிகள் மன்னிக்கப்பட்டனர். எனவே, தமிழர் தரப்பிலிருந்து இதைவிடவும் மேலதிகப் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.” என்று கூறினார்.