பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள படம் லூசிபர். இந்தப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்து வருகிறார்கள். படத்தின் சண்டை காட்சியில் மோகன்லால், போலீசாரின் மார்பில் காலை வைத்து உதைக்கும் காட்சிகள் உள்ளது. இந்த காட்சியை போஸ்டராகவும் ஒட்டியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள போலீஸ் சங்கம், முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளித்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
போலீசாருக்கு இப்போது மக்கள் மத்தியில் மதிப்பும், பயமும் குறைந்து வருகிறது. அதற்கு ஊக்கம் அளிப்பதுபோன்று மோகன்லால் நடித்த சண்டை காட்சி உள்ளது. இது போலீசாருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும். குற்றவாளிகளே போலீஸ் மீது கை வைக்க பயந்தனர். இப்போது பொதுமக்களே கை வைக்கிற அளவிற்கு திரைப்படங்களில் காட்சிகள் வைக்கப்படுகிறது.
இது இளைஞர்களை போலீசுக்கு எதிராக திருப்பி விடுகிறது. புகையிலை, மது அருந்துவது, போன்ற காட்சிகளில் அப்படிச் செய்வது தவறு என்று வாசகம் இடம்பெறுவது போன்று இனி போலீசாரை தாக்கும் காட்சியில், “போலீசாரை தாக்குவது தவறு” என்ற வாசகம் இடம்பெற வேண்டும். என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.