பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. 300 படங்களுக்கு மேல் நடித்தவர். அவர் தன் மகனை வைத்து சலீம் என்ற படத்தை தயாரித்தார். இதனை இயக்கிய சவுத்ரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்தார். அதனை காசோலையாக கொடுத்தார். அந்த காசோலை பணமில்லை என்று திரும்பிவர, சவுத்ரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மோகன்பாபுவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் மோகன்பாபு.
இதுகுறித்து அவர் கூறியதாவது : என் மகன் நடித்த சலீம் படத்தை இயக்கிய சவுத்ரிக்கு 40 லட்சம் சம்பளம் கொடுத்தேன். சலீம் படத்தை மிகவும் நம்பினேன், அதனால் மகனை வைத்து அடுத்தப்படம் இயக்க சவுத்ரிக்கு 40 லட்சம் ரூபாய் முன்பணத்தை காசோலையாக கொடுத்தேன். ஆனால் சலீம் படம் தோல்வி அடைந்தது. அதனால் சவுத்ரியை கொண்டு அடுத்தப்படம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட்டேன்.
அதனால், முன்பணமாக கொடுத்த 40 லட்சம் காசோலையை வங்கியில் செலுத்த வேண்டாம் என்று கூறியிருந்தேன். ஆனால் அதையும் மீறி அவர் வங்கி கணக்கில் செலுத்தி என்னை மாட்டி விட்டுவிட்டார். இது நம்பிக்கை துரோகம். இதை எதிர்த்து நான் மேல்முறையீடு செய்ய இருக்கிறேன். அங்கு நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன். என்றார்.