தமிழ் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த பலர் சின்னத்திரை தயாரிப்பாளராக இருக்கிறார்கள். ராதிகா, குஷ்பு, ஸ்ரீப்ரியா. நளினி இப்படி நிறைய பேரை சொல்லலாம். இந்த வரிசையில் தற்போது தயாரிப்பாளராகி இருக்கிறார் லலிதா குமாரி. கே.பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமானவர் லலிதா குமாரி. இவர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போதைய நடிகர் சங்க நிர்வாகத்தில் பணியாற்றி வருகிறார்.
கலர்ஸ் தொலைக்காட்சியில் கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக தொடங்கியிருக்கும் தறி என்ற தொடரை தயாரிக்கிறார் லலிதாகுமாரி. இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது குறித்து லலிதா குமாரி கூறியதாவது:
நெசவாளர் சமூகத்தின் உண்மையான சாரத்தையும், அவர்களது சவால்களையும் நாங்கள் நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறோம். தறி தொடரை தயாரிப்பதற்காக இரண்டு வாரங்கள் அங்கு தங்கி, நெசவாளர்கள் எப்படி நூல் எடுக்கிறார்கள், காய வைக்கிறார்கள், கலர் பூசுகிறார்கள். பட்டு நூலை எப்படி காயவைத்து பிரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அங்கிருக்கும் மக்களிடம் நேர்காணல் செய்துதான் இந்த கதையை உருவாக்கினோம்.
இந்த கதையின் வழியாக நெசவுக்கலை மீது மக்களது கவனமும், அக்கறையும் திரும்பும் என்று உறுதியாக நம்புகிறோம். பாரம்பரியமான நெசவு தொழிலை பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்துவதில் இந்த தொடர் முக்கிய பங்காற்றும். என்றார்.