சூது கவ்வும், பீட்சா, தெகிடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். அதை எடுத்து பேர் சொல்லும் விதமான படங்கள் எதுவும் தமிழில் அவருக்கு அமையவில்லை. இந்தநிலையில் மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ‘மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்’ என்கிற வரலாற்று படத்தில் முக்கியமான ஒரு போர்வீரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அசோக் செல்வன்.
இவருக்கு எப்படி மலையாள வாய்ப்பு வந்தது என ஆச்சரியப்பட வேண்டாம் ஏற்கனவே, தமிழில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய ‘சில சமயங்களில்’ என்கிற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் தான் அசோக் செல்வன். அந்த நட்பின் அடிப்படையில் தற்போது தான் இயக்கிவரும் மலையாள படத்திலும் அசோக் செல்வனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். இந்த படத்தில் ஏற்கனவே அர்ஜுன், பிரபு, கீர்த்தி சுரேஷ். என தமிழ் நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது