சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 13-ஆவது படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். மிஸ்டர். லோக்கல் என பெயரிடப்பட இருப்பதாக சொல்லப்படும் இந்தப் படத்தை ‘ஸ்டுடியோகிரீன்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 14-ஆவது படமாக உருவாகும் சயின்ஸ் பிக்ஷன் படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். 50 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கப்போய்விட்டார் சிவகார்த்திகேயன்.
அதனால் இயக்குநர் ரவிகுமார் அப்செட்டாகி, இந்த படத்தை தயாரிக்கும் ’24 AM STUDIOS’ நிறுவனத்துடன் பேசியிருக்கிறார். அதன்பிறகு இப்படத்தை முடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இதற்கிடையே, விஷால், அர்ஜுன், சமந்தா நடிக்க, ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். வெற்றிப் படமாக அமைந்த இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து பி.எஸ்.மித்ரன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை ’24 AM STUDIOS’ நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தகவல் வெளியாகியிருந்தது.
சீமராஜா பட பிரச்சனை காரணமாக, சிவகார்த்திகேயனின் 15-ஆவது படத்தை வேறு ஒரு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது இந்தப்படத்தையும் ’24 AM STUDIOS’ நிறுவனமே தயாரிப்பது உறுதியாகியுள்ளது.