ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் டுபாயில் கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேராவிடம் நேற்று (18) குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சதி முயற்சியுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவுடன் பாடகர் அமல் பெரேராவும், நதீமால் பெரேராவும் மிகவும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அமல் பெரேராவும், நதீமால் பெரேராவும் பாதாள உலக தலைவர் மாகந்துரே மதூஸின் மிக நெருங்கிய நண்பர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த கொலை சதி முயற்சி தொடர்பிலும் மதூஸின் பெயரும் பல இடங்களில் சம்பந்தப்பட்டுள்ளதகாவும் குறிப்பிடப்படுகின்றது.
மாகந்துரே மதூஸ் மற்றும் பாடகர் அமல் பெரேரா ஆகியோரிடையே காணப்பட்ட தொடர்பு தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நதீமால் பெரேராவிடம் நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத் தகவல்களை மேற்கோள்காட்டி இன்றைய சகோதார நாளிதழொன்று அறிவித்துள்ளது.
பாதாள உலக தலைவர் மதூஸ் மற்றும் அமல் பெரேரா ஆகியோர் தற்பொழுது டுபாய் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.