எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், முல்லைத்தீவில் 75ஆயிரத்து 381பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் காந்தீபன் தெரிவித்துள்ளார்.
குறித்த ஜனாதிபதி தேர்தலில், முல்லைத்தீவில் 135வாக்களிப்பு நிலையங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அதேவேளை 9 வாக்கெண்ணும் நிலையங்களை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குள்ளேயே அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இதுவரை 2845 அஞ்சல் வாக்காளர்களது வாக்காளர் அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய அஞ்சல் வாக்காளர்களது வாக்கெண்ணும் பணிகள் வவுனியாவில் வைத்தே இடம்பெறும் எனவும் காந்தீபன் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் நடவடிக்கைகளில் இடம்பெறும் சட்டவிரோத சம்பவங்களை முறையிடுவதற்கான, முறைப்பாட்டு நிலையங்களும் தேர்தல் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் தேர்தல் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சிறிய முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.