தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டும்தான் முன்பதிவில் வரவேற்பு இருக்கிறது. அடுத்த கட்ட நடிகர்களுக்கும், சிறிய படங்களுக்கும் வரவேற்பு அதிகம் இருப்பதில்லை என்பது கடந்த சில வருடங்களாகவே இருக்கிறது.
புதிய படங்கள் வெளிவருவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே முன்பதிவுகள் ஆரம்பமாகும். ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது படங்களுக்கு மட்டுமே இரண்டு, மூன்று நாட்களுக்காவது முன்பதிவு சிறப்பாக நடந்து விடும். விஜய் நடித்து வெளிவந்த ‘பிகில்’ படத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பதிவு மிகவும் பிரமாதமாக இருந்தது என்பதும் உண்மை.
நாளை விஷால் நடித்து வெளிவர உள்ள ‘ஆக்ஷன்’, விஜய் சேதுபதி நடித்து வெளிவர உள்ள ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்களுக்கான முன்பதிவு மிகவும் தடுமாற்றமாக உள்ளது.
ஆன்லைன் முன்பதிவு இணையதளங்களில் சென்று பார்த்த போது ‘ஆக்ஷன்’ படத்திற்கு மட்டுமே முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது. நாளை மாலை காட்சியில் கூட பல தியேட்டர்களில் இரண்டு வரிசை கூட முன்பதிவு ஆகவில்லை. 50 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள படம் என்று சொல்கிறார்கள்.
50 கோடி ஆக்ஷன் படத்திற்கு இந்த நிலைமை என்றால் ‘சங்கத்தமிழன்’ பற்றி சொல்லவா வேண்டும். ‘சங்கத்தமிழன்’ படத்திற்கு ஒரே ஒரு இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு ஆரம்பித்துள்ளார்கள்.
திரையுலகில் இது பற்றி விசாரித்த போது, சமீபத்தில்தான் ‘பிகில், கைதி’ படங்களுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து அந்தப் படங்களைப் பார்த்தார்கள். மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவர்கள் மீண்டும் அப்படியே தியேட்டர் பக்கம் வருவார்கள் என்று சொல்ல முடியாது. படங்கள் வெளிவந்து நன்றாக இருக்கிறது என்ற செய்தி பரவினால் மட்டுமே அவர்கள் படம் பார்க்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்