ராய்பூர் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐபிஎல் போட்டியில் கடைசிப் பந்தில் மும்பை இண்டியன்ஸை 2 விக்கெட்களால் வெற்றிகொண்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, அணிகள் நிலையில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
இந்தத் தோல்வியுடன் முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸ் இந்த வருட ஐபிஎல் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறுகிறது.
புவ்ணேஷ்வர் குமாரின் துல்லியமான பந்துவீச்சும் க்ருணல் பாண்டியாவின் அதிரடி அரைச் சதமும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றி அடையச் செய்தன.

அப் போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் க்ருணல் பாண்டியாவை இழந்தது. அப்போது மொத்த எண்ணிக்கை 7 விக்கெட்கள் இழப்புக்கு 149 ஓட்டங்களாக இருந்தது.
எனினும் கடைசி 2 ஒவர்களில் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 18 ஓட்டங்களைப் பெற்று றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் திலக் வர்மா (57), நாமன் திர் (47), ரோஹித் ஷர்மா (22) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
க்ருணல் பாண்டியா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 73 ஓட்டங்களைக் குவித்தார்.
அவருக்கு அடுத்தபடியாக ஜேக்கப் பெத்தேல் 27 ஓட்டங்களுடன் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் கோபின் பொஷ் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தீப்பக் சஹார் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
