முன்னாள் அமைச்சர்கள், பிரதி, இராஜாங்க அமைச்சர்களுக்கான வாகனங்களை உடனே ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
ஒப்படைக்காவிட்டால் பாதுகாப்பு தரப்பின் உதவுயுடன் அவை மீள பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஷேட உரை ஒன்றை நிகழ்த்தி இருந்தார்.
அதில் மேலும் கூறியதாவது, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடு பொருத்தமற்றதாக இருந்ததாலேயே அவசர அவரமாக நாடாளுமன்றை கலைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
அத்தோடு நாடாளுமன்றை கலைத்த பின்னர் சபாநாயகர் செயற்பட்ட விதமும் அசாதாரணமானது. அவருடைய இச் செயற்பாடு குறித்து நான் கவலையடைகின்றேன்.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. அது 500 மில்லியன் வரை சென்றது. இவ்விடயம் கவலைக்குரியதாகும்.
அவ்வாறு மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றிக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு விலை நிர்ணயம் செய்வது, அரசியல் ரீதியாக எந்தளவுக்கு குறைத்து மதிப்பிடுகின்றமைக்கு ஒப்பானது.
அதன் மூலம் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை கருத்திற் கொண்டும், முன்னாள் சபாநாயகரின் நடவடிக்கைகள் காரணமாகவுமே நாடாளுமன்றத்தை கலைக்க நேரிட்டது.
அவ்வாறான முடிவை எடுக்க நேறிட்டதை எண்ணி நான் கவலையடைகின்றேன். 1947 முதல் இதுவரைக்கும் எமது நாட்டிலிருந்த சபாநாயகர்கள் அனைவரும் நடுநிலைமையாக செயற்பட்டனர்.
ஆனால் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களுக்கு அமைய பிரதமரை நியமித்தமையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாது தெரிவித்த சில கருத்துக்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு காரணமானது.
மேலும் அமைச்சர்கள் மாத்திரம் தங்களுக்கான வாகனங்கள் மற்றும் உடைமைகளை வைத்திருக்கலாம். முன்னாள் அமைச்சர்கள், பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் வாகனங்களை உடனே ஒப்படைக்க வேண்டும்.
அவற்றைக் கையளிப்பதில் தாமதம் ஏற்படுமாயின் பொலிஸார் மூலம் சட்ட ரீதியாக அவ்வாகனங்களை மீளப் பெறுவதற்கும் அவ்வாறு சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் எவராக எந்தக் கட்சியை சார்ந்தவர்களாக இருப்பினும் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஆகையால் அரச வாகனங்களை உபயோகப்படுத்துதல் அரச பொது உடைமைகளை உபயோகப்படுத்துதல் ஆகியன இத்தருணத்தில் முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவ்வாறான உபயோகம் சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதையும் உங்களுக்கு நான் மிகுந்த தயவுடன் ஞாபகப்படுத்துகின்றேன்.
மேலும் எப்படியானாலும் தற்போது பொது தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைகுழுவுக்கும், முப்படையினருக்கும், சகல அதிகாரிகளுக்கும் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளை வழங்குவேன்.
மேலும் தேர்தல் காலத்தில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த முயல வேண்டாம். அரச சொத்துகளை தேர்தல் காலத்தில் துஷ்பிரயோகம் செய்ய எந்த வகையிலும் இடமளிக்க மாட்டாது” என கூறியுள்ளார்.