மலையாள திரையுலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வினயன். மம்முட்டி, திலீப், பிருத்விராஜ், விக்ரம் என மிகப்பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கி உள்ளார். நடிகர் கலாபவன் மணியை அறிமுகப்படுத்தி, அவரை வைத்து சுமார் பத்து படங்களுக்கு மேல் இயக்கி அவரை வளர்த்துவிட்டவரும் இவரே.
ஆனால் ஏனோ தெரியவில்லை, இவருக்கும், மோகன்லாலுக்கும் பெரும்பாலும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருந்து வந்தது.. அதனால்தானோ என்னவோ கடந்த 30 வருடங்களில் மோகன்லாலை வைத்து இவர் ஒரு படம் கூட இயக்கவில்லை. தவிர அவ்வப்போது மோகன்லால் குறித்து ஏதாவது சர்ச்சையான கருத்துக்களையும் வெளியிட்டு வந்தார் வினயன்
இந்த நிலையில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மோகன்லாலை வைத்து தான் படம் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வினயன். நேற்று அதிகாலை மோகன்லாலை சந்தித்த, வினயன் சில மணி நேரங்கள் மனம் விட்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டாராம்.
அதன் ஒரு பகுதியாகத்தான் மோகன்லாலை வைத்து படம் இயக்கும் முடிவும் அங்கே எடுக்கப்பட்டதாம். வரும் மார்ச் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என அறிவித்துள்ளார் வினயன். கடந்த 30 வருடமாக இருவருக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது என்றே சொல்லலாம்